புதன், ஜூலை 02, 2014

ஜீவ(ா) காருண்யம்




அலமேலுவுக்கு சொந்தமாக ஒரு தெருவே இருந்தது. அவளும் அவளுடைய குட்டியும் ஜம்பமாக லெப்ட் ரைட் லெப்ட் என்கிற தாள லாயத்தோடு இடுப்பை ஆட்டி ஆட்டி தெருவில் நடந்து செல்வது சுதந்திர தின அணிவகுப்பைப் போலவே இருக்கும். அல்லது வாடகை வசூலிக்க வந்த வீட்டுக்காரனைப் போல இருக்கும். இருவருமாக இரவுகளில் தெருவுக்கு காவலிருப்பார்கள். பகலில் நிழலான வீட்டு திண்ணைகளின் வாசல்களில் படுத்துறங்குவார்கள். எப்போதாவது குரைப்பார்கள்.

தெருவின் ஒவ்வொருவரையும் ஒரு கேபிள்டிவிக்காரனைப்போல தனித்தனியாக அங்க அடையாளங்களோடு அறிந்துவைத்திருந்தாள் அலமேலு. அவர்கள் புல்லட்டில் வந்தாலும் சைக்கிளில் வந்தாலும் தாங்கிதாங்கி ஒருபக்கமாக நடந்துவந்தாலும் மாறுவேடத்தில் மச்சம் மரு வைத்துக்கொண்டு வந்தாலும் கூட மிகச்சரியாக அடையாளம் கண்டுபிடித்து வாலாட்டி அன்பு பாராட்டுவதில் அவளை அடித்துக்கொள்ள இன்னொரு நாய் பக்கத்து தெருவிலிருந்துதான் பிறந்து வரவேண்டும். 

நண்பர்களை அழைத்துவந்தால் அவர்களையும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து தன்னுடைய எழுபத்திரெண்டு கிராம் சின்ன மூளையினோரம் சேமித்து வைத்துக்கொள்ளும். அடுத்த முறை அந்த நபர் தனியாக வந்தால் குலைக்காமல் அவர்களிடமும் சினேகம் பாராட்டும். 

தெருவிலிருந்து காலி பண்ணிவிட்டு சென்றவர்கள் இன்னொரு சமயம் அத்தெருவை கடக்க நேரிட்டாலும் அவர்களை நினைவுவைத்து வாலாட்டுவதில் கெட்டிக்காரி. இப்படியெல்லாம் நாய்கள் வாய்க்க நம் தெரு போன யுகத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தெருபிரஜைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பெருமைப்பட்டுக்கொள்வார்கள். 

தன்னுடைய வாரிசு மணிக்கும் தெருவின் பிரஜைகளை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்திருந்தாள் அலமேலு. யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவள் பாடமெடுத்திருந்தாள். உதாரணத்திற்கு மூன்றாவது வீட்டு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வெளியே கிளம்பும்போது அவரை தொந்தரவு செய்யாமல் பொறுமையாக அவருக்கு அருகில் போய் நின்றுகொண்டு வாலை விடாமல் ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். அவரே ‘’அலமேலு கம்’’ என்று அழைப்பார். அதுவரை காத்திருக்க வேண்டும். தெருமுனை அண்ணாச்சி கடையில் டைகர் பிஸ்கட்டோ பார்லேஜியோ வாங்கிப்போடுவார். அவரிடம் அளவுக்கதிகமாக வாலாட்டினாலோ, அவர் மீது உடல் பட்டாலோ, ஆர்வக்கோளாறில் வவ் வவ் என்று சப்தமிட்டாலே போ என்று குச்சியை எடுத்து விரட்டிவிடுவார் கோவக்காரர். அதனாலேயே அவருக்கும் அலமேலுவுக்குமான அன்டர்ஸ்டேன்டிங் அவுட்ஸ்டேன்டிங்காக இருக்கும். 

வேறு நாய்கள் அந்த தெருவுக்குள் நுழைந்துவிட முடியாது. மீறி நுழைந்தால் அவ்வளவுதான் ஆத்திரத்துடன் வாயை அகலவிரித்து கோரைபற்களை காட்டிக்கொண்டு வெறித்தனமாக கத்தி விரட்டியடிப்பாள் அலமேலு. இப்போது குட்டி மகன் மணியும் இணைந்து க்கீ க்கீ என்று சண்டையிட ஆரம்பித்திருந்தான். இவர்களிருவருக்கும் அலமேலு,மணி என்று யார் பெயர் சூட்டியதென்பது தெருவில் யாருக்கும் தெரியாது. ஆனால் எப்படியோ அப்பெயர்களே நிலைத்துவிட்டது. கள்ளக்காதல் விவகாரங்களும் நாய்களின் பெயர்களும் எப்படியோ எளிதில் தெருமுழுக்க பரவிவிடுகிறது. 

சில வாரங்களுக்கு முன்புதான் அலமேலு ஐந்து குட்டிகளை ஈன்றாள். அக்குட்டிகளில் நான்கு கண்களில் ஏதோ நோய் தாக்கி இறந்துபோய்விட்டனர். 

மணி மட்டும்தான் தப்பிப்பிழைத்தான். ஒற்றைக்கண்ணில் சீழ்வடிய மணியோடு சுற்றிக்கொண்டிருந்தான். மணியை காப்பாற்றியது யுவாஞ்சலிதான். வீட்டில வைத்திருந்த கண்மருந்தினை எடுத்துக்கொண்டு வந்து குட்டிநாயின் கண்களில் விட்டு மணியை காப்பாற்றினாள். யுவாஞ்சலிக்கு கண்களில் பிரச்சனை இருந்தபோது டாக்டர் கொடுத்த மருந்து. 

தெருமத்தியில் இருந்த சிகப்பு கேட் போட்ட வீட்டில்தான் யுவாஞ்சலி வசிக்கிறாள். அலமேலுவின் ரகசிய சினேகிதி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். எப்போதிருந்து அவளும் அலமேலுவும் நண்பர்களானார்கள் என்பது அவளுக்கும் தெரியாது அலமேலுவுக்கும் தெரியாது. அலமேலு குட்டியாக இருக்கும்போதிருந்தே யுவாஞ்சலியை அறிந்திருந்தாள். போலவே யுவாஞ்சலி குட்டியாக இருக்கும்போதிருந்தே அலமேலுவை சினேகித்திருந்தாள்.

தினமும் மாலை ஆறு மணிக்குதான் இருவரும் சந்திப்பார்கள். வீட்டுக்கார தாத்தா கண்ணில் படாமல் நேரம் பார்த்து கேட்டருகே வந்து நின்று கொண்டு… ‘அல்லு.. அல்லு..’’ என்று எண்ணெயிடாத வாசற்க் கதவை திறக்கையில் வருகிற ஒலியைப்போல குரல்கொடுப்பாள். யுவாஞ்சலியின் குரல்கேட்டு இருவரும் துள்ளி துள்ளி ஓடி வந்து அவளருகே நின்று வாலை வாலை ஆட்டியபடி அவளுடைய கால்களை சுற்றிச்சுற்றி வருவார்கள். 

இங்கேயே வெயிட் பண்ணுங்க என்று ஆள்காட்டி விரலை நீட்டி கொஞ்சமாக குனிந்து கண்டிப்பாக சொல்லிவிட்டு… கயிற்றின் மேல் நடக்கும் சாகசக்காரனைப்போல ஒரு தேங்காய்த்தொட்டி நிறைய பாலினை சிந்தாமல் சிதறாமல் நடுங்கிக்கொண்டே எடுத்துவருவாள். அதை வீட்டிலிருந்து வெளியே கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மீண்டும் கேட்டுக்கு பக்கத்தில் வந்து நின்றுகொள்வாள். தேங்காய்தொட்டியை கீழே வைக்கும்வரை எக்கி எக்கி குதித்துக்கொண்டே இருக்கிற அலமேலு பாலை வைத்த அடுத்த நொடி கடகடவென நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்துவிடுவாள். 

மணி இன்னும் தாய்ப்பால்தான் குடிக்கிறான் என்பதால் அவன் அம்மாவின் வயிற்றோர மார்புக்காம்புகளைத்தான் வாஞ்சையோடு கவ்விக்கொண்டிருப்பான். தேங்காய்த்தொட்டிப்பால் தீர்ந்ததும் மீண்டும் கேட்டருகே வந்து இருவருமாக அவளை பார்த்து தலைதூக்கி வாலாட்டி அன்பை தெரிவிப்பார்கள். அலமேலுவை விடவும் மணியை யுவாஞ்சலிக்கு மிகவும் பிடிக்கும். 

பள்ளி முடிந்து வீடுவந்த பிறகு அப்பா ஆப்பிஸிலிருந்து  வரும்வரைக்கும் அவளுடைய போகோ சேனல் சோட்டாபீம் சுட்டிவிகடன், பார்பீ, கரடிபொம்மை எல்லாமே அலமேலுவும் மணியும்தான். தன்னுடைய  அப்பா ஜீவாவிற்கும் அலமேலுவையும் மணியையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் யுவாஞ்சலி. 

யுவாஞ்சலியை ஜீவாவின் கைகளில் கொடுத்துவிட்டு அவள் அம்மா எப்போதோ வேறு தேசம் போய்விட்டாள். அதற்குபிறகு யுவாஞ்சலியின்  அப்பா தனியாகவேதான் பாப்பாவை வளர்த்தார். சொல்லப்போனால் வாசலில் வளரும் அருகம்புல்லைப்போல அவளாகவேதான் தானாக வளர்ந்துகொண்டிருந்தாள். ஏழு வயதிலேயே தனியாகவே வாழ பழகிக்கொண்டிருந்தாள். 

காலையில் எழுந்து பல்தேய்த்து, குளித்து, உடைமாற்றி, தலைசீவி பள்ளிக்கு தயாராகி ஜம்மென்று நிற்பாள்,. அவளுக்கு வேண்டிய உணவினை மட்டும் தயாரித்து பாதியை டிபன் பாக்ஸிலும் மீதியை ஃப்ரிட்ஜிலும் வைத்துவிட்டால் போதும். பள்ளி முடிந்து திரும்பிவந்து உணவை எடுத்து சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு அப்பா வரும் வரை வீட்டுப்பாடம் செய்துவிட்டு காத்திருப்பாள். வந்ததும் அன்றைக்கு பள்ளியில் யார் யாரோடு வம்பு சண்டை, யார் யாருடைய பென்சிலை திருடியது, டீச்சர் சொன்ன பூனை கதை, பக்கத்துவீட்டு அங்கிளுக்கும் ஆன்ட்டிக்கும் நடந்த குங்பூ பைட் என எல்லா கதைகளையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடிப்பாள். எதையாவது மறந்துவிட்டால் மிட் நைட்டில் அப்பாவை எழுப்பியாவது சொல்லிவிடுவாள். இக்கதைகளில் பிரதானமாக மணியின் சாகசங்கள் இடம்பெறும். அவளுடைய கதைகளை கேட்டு அப்பா தூங்கிபோயிருப்பார். யுவாஞ்சலி சொல்லிக்கொண்டேயிருப்பாள். 

இரண்டு நாட்களாக அலமேலுவை காணவில்லை. மணி மட்டும்தான் தனியாக சுற்றிக்கொண்டிருந்தான். முதல்நாள் மாலை பால் வைக்க அலமேலுவை அழைத்தபோது மணிமட்டும்தான் வந்து நின்றான். ‘’எங்கடா உங்கம்மா’’ என்று அதட்டினாள் யுவாஞ்சலி. மணி ‘’கீகீ’’ என்றான். மணிக்குமட்டும் பால் வைத்தாள். மணி அதை குடிக்காமல் யுவாஞ்சலியின் கால்களையே சுற்றிச்சுற்றி வந்தான். யுவாஞ்சலிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துவிட்டாள். அடுத்த நாளும் அலமேலுவை காணோம். யுவாஞ்சலிக்கு பதட்டமாக இருந்தது. மணி தனியாகத்தான் சுற்றிக்கொண்டிருந்தான். 

‘’அப்பா இந்த அலமேலு இல்லப்பா அலமேலு.. அவள இரண்டுநாளா காணோம்ப்பா…’’ என்று சோகமாக சொன்னபோது யுவாஞ்சலியின் அப்பா அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெருவிலிருந்த கீதா, மீனு, ராகுல், ராஜு, ப்ரியா முதலான அவளுடைய சக தெரு நண்பர்களைப் போலவே அவரும் அந்த விஷயத்தில் அதிக ஆர்வமின்றி இருந்தார். அத்தெருவில் அலமேலு தொலைந்துபோனதற்காக யுவாஞ்சலி மட்டும்தான் வருத்தமாயிருந்தாள். 

‘’அப்பா அந்த மணி இல்லப்பா மணி, அவன் அலமேலுவ தேடிகிட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா இரண்டு நாளா திரிஞ்சிகிட்டிருக்கான்ப்பா… பாக்கவே பாவமா இருந்துச்சுப்பா.. நம்ம வீட்டு கேட்ருக்குல்லப்பா… கேட்டு.. அங்கதான் படுத்துகிட்டு க்கீ க்கீனு கத்திகிட்டிருந்துச்சுப்பா.. ஹவுஸ் ஓனர் தாத்தா இல்ல.. ஒரு சின்ன கல்லை எடுத்து அடிச்சாரா வலிச்சிருக்கும்போலப்பா பாவம்ம்மா கத்திகிட்டே ஓடிடிட்டான்.. நான்தான் போயி தேங்காதொட்டில பால் வச்சேனா.. கால்ல கல்லு பட்டுருந்துச்சா.. அதுல அந்த க்ரீம் இல்ல அது தேச்சேன். வலிச்சிருக்கும்போல, ஆனா பாலை குடிக்காம என் கால்கிட்டயே நின்னு கத்திகிட்டே இருந்தான்ப்பா’’ என்று வருத்தம் மிகுதியாகச் சொன்னாள். 

யுவாஞ்சலியின் பேச்சில் ஆர்வமின்றி வேறெதையோ யோசித்துக்கொண்டிருந்த ஜீவா  ‘’வீட்டுபாடம்லாம் முடிச்சியா’’ என்றார். அவள் வீட்டுப்பாடங்களை ஒருநாளும் முடிக்காமல் இருந்ததில்லை இன்றும் அப்படித்தான்.. அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி கோபமாக டிவியைப்போட்டு சோட்டாபீம் பார்க்க ஆரம்பித்தாள். 

அன்று இரவெல்லாம் யுவாஞ்சலி தூங்கவேயில்லை. மணியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் அவசரமாக ஓடிப்போய் ஜன்னல் வழியே மணியைத்தேடினாள். அவன் அங்கிமிங்குமாக தெருவில் மோப்பம் பிடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தான். அன்றைக்கு யுவாஞ்சலியால் விரைவாக பள்ளிக்கு கிளம்ப முடியவில்லை. 

பக்கத்து தெரு நாய்கள் பழைய பகையை மனதில் வைத்து மணியை கடித்துவைத்துவிட்டால் என்னாவது? அவனை யார் டாக்டரிடம் அழைத்துச்சென்று ஊசிகுத்துவது? அலமேலு இருந்தாலாவது குரைத்து மிரட்டி விரட்டுவாள். மணிக்கு இன்னும் சரியாக குரைக்கக்கூட தெரியாது என்ன பண்ணுவான் சின்னப்பையன்? அவனுக்கு ரோடு க்ராஸ் பண்ணக்கூட தெரியாது. சாப்பிடவும் தெரியாது. நாமும் பள்ளிக்குப்போய்விட்டால் யார்தான் மணியை காப்பாற்றுவது என நினைத்துக்கொண்டே பள்ளிக்கு சென்றாள். பள்ளியில் உட்கார்ந்துகொண்டும் இதைதான் யோசித்துக்கொண்டிருந்தாள். மதியம் சாப்பிட உட்கார்ந்த போதுகூட மணி காலைலருந்து என்ன சாப்பிட்டிருப்பான்? அவனுக்கு அம்மா பால்தவிர எதுவுமே பிடிக்காதே? என்று யோசித்துவிட்டு கொண்டுவந்த தக்காளிசாதத்தை அப்படியே வைத்துவிட்டாள். முட்டை மட்டும் சாப்பிட்டுக்கொண்டாள். அவளுக்கு அது ரொம்பவே பிடிக்கும்.

பாடங்களை கவனிக்கமுடியவில்லை. பென்சில் முனையை கடித்தபடி பள்ளி முடிவதற்காக காத்திருந்தாள். மாலை வீட்டுக்குப்போனதும் மணியை அழைத்துக்கொண்டு அலமேலுவை நாமே தேடிக்கண்டுபிடித்துவிட வேண்டியதுதான் என முடிவுசெய்தாள். அப்பா வர எட்டு மணியாகும் அதற்குள் அலமேலுவை கண்டுபிடித்து மணியிடம் சேர்த்துவிட்டு நல்ல பிள்ளையாக வீட்டில் வந்து இருந்துவிடலாம். அப்பா திட்டமாட்டார்.

தெருமுக்கு இஸ்திரிகடை தாண்டி, அவளுக்கு தெரிந்த அடுத்த தெரு கோவில்வரைக்கும் சென்றுவிட்டாள் எங்குமே அலமேலுவை காணவில்லை. அவள் முன்னே நடக்க பின்னாலேயே மணியும் விருக் விருக்கென தவ்விதவ்வி இடுப்பை ஆட்டிக்கொண்டு நடந்தான். இரண்டாவது தெரு தாண்டி குப்பைத்தொட்டிக்கு அருகே வந்துவிட்டாள். 

‘’மணி அலமேலுவ இங்கயும் காணோம்.. எங்கயோ ரொம்ப தூரம் உங்கம்மா போயிட்டா போல, வா நாம வீட்டுக்கே போவோம்’’ என்று அழைத்தாள்… மணி அந்த குப்பைத்தொட்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு வரமறுத்தான். ‘’மணிப்ளீஸ் வா…அப்பா வந்துடுவாரு’’ மீண்டும் அழைத்தாள். மணி திரும்புவதாயில்லை. குப்பைத்தொட்டியில் குதிக்க எத்தனித்தது. குப்பைத்தொட்டியை பார்த்து க்ர்ர்ரீய் க்ர்ரீய் என குரைத்தது. 

குப்பைத்தொட்டியை நெருங்கிச்சென்றாள் யுவாஞ்சலி. அங்கே நாற்றமடித்தது. எட்டிப்பார்க்கலாமா என்று தயக்கமாக இருந்தாலும். அவளுக்கும் உள்ளே இருப்பது சரியாக தெரியவில்லை. தன்னுடைய கைகளை குப்பைத்தொட்டியின் முனையில் பிடித்து குதிங்காலை எக்கி உள்ளே பார்த்தாள். உள்ளே ரத்தம் தோய்ந்த ஒரு நாய் செத்துக்கிடந்தது. பதறிப்போய் பயந்து உடனே இறங்கிவிட்டாள். அவளுக்கு மீண்டும் ஒருமுறை எட்டிப்பார்க்க பிடிக்கவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட தீர்மானித்தாள். 

‘’மணி இப்போ வரப்போறீயா இல்லையா’’ அதட்டலாக முறைத்தபடி அழைத்தாள். மணி நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து மீண்டும் ஒருமுறை குப்பைத்தொட்டியை பார்த்து குரைத்துவிட்டு அவளிடமே திரும்பியது. கீர்க் கீர்க்.. 

‘’பாப்பா தனியா இங்கே என்ன பண்ற.. உங்க அப்பா எங்க..’’ குரல்கேட்டு திரும்பி பார்த்தாள் பக்கத்துவீட்டு ஆன்ட்டி கையில் காய்கறியோடு. ‘’ஆன்ட்டி உள்ளே ஒரு நாயி கிடக்கு’’ என்று விரலால் சுட்டிக்காட்டினாள். எட்டிப்பார்த்த ஆன்ட்டி ‘’அடடா ஆக்ஸிடென்ட் ஆகிருக்கும்போல பாப்பா.. செத்துடுச்சு போல.. அலமேலுவாட்டம் இருக்கே.. சரி வா இருட்டிருச்சு.. நாம வீட்டுக்கு போவோம்’’ என்று அழைத்தாள். ‘’சாமிகிட்ட போயிடுச்சா ஆன்ட்டீ’’ என்றாள். ‘’அது அலமேலுதானா ஆன்ட்டீ’’ என்றாள் மீண்டும். ஆன்ட்டி அமைதியாயிருந்தாள். ‘’அலமேலுவேதானா ஆன்ட்டீ’’ என்றாள். சற்றே நீண்ட யோசனைக்கு பிறகு ‘’ஆமாம் பாப்பா அலமேலுதான்’’ என்பதைப்போல தலையாட்டினாள். ‘’இன்னொருக்கா பாருங்க ஆன்ட்டீ’’ என்றாள். மீண்டும் பார்த்துவிட்டு மீண்டும் தலையாட்டினாள். 

‘’அப்பா மணி இல்லப்பா மணி… அவனை நாமளே வளர்க்கலாம்ப்பா.. அதுக்கு யாருமே இல்லப்பா.. அவன் ரொம்ப நல்லவன்ப்பா, நல்லா டான்ஸ்லாம் ஆடுவான்ப்பா’’ என்றாள் யுவாஞ்சலி. அப்பா சட்டையை கழட்டி வைத்துவிட்டு டிஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார். 

‘’அலமேலு இல்லப்பா அலமேலு அவ செத்து போய்ட்டாளாம், இனிமே மணி என்ன பண்ணுவான்ப்பா.. அவனை பாத்துக்க அப்பா கூட இல்லப்பா.. நாமளே பாத்துக்கலாம்ப்பா.. ப்ளீஸ்ப்பா ப்ளீஸ்ப்பா, அவன் உனக்கும் பிரண்ட் ஆகிடுவான்ப்பா’’ கெஞ்சினாள். 

‘’இல்ல பாப்பா அது சரியா வராது, கீழே ஹவுஸ் ஓனர் தாத்தா ஒத்துக்கமாட்டாரு முன்னமே சொல்லிதான் வீடுகுடுத்தாருப்பா.. புரிஞ்சிக்கோ பாப்பா, அத கொண்டாந்து எங்க கட்டிவைப்ப’’ என்றவன் ஜன்னல் வழியாக கீழ்நோக்கி வாசலை பார்த்தான். தெருவோர மின்விளக்கொளியில் கேட் அருகே அந்த குட்டி நாய் கீழே எதை எதையோ முகர்ந்துபடி அங்கிமிங்கும் சுற்றி ஓடி ஒரு பறக்கும் பூச்சியை தாவிப்பிடிக்க அதன் பின்னே ஓடியது. யுவாஞ்சலியின் முகம் இரவின் சூர்யகாந்தியை ஒத்திருந்தது. 

‘’பாப்பா எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.. நாம வேணா தினமும் அதுக்கு சாப்பாடு வைக்கலாம். பிஸ்கட் வாங்கிப்போடலாம், வீட்லலாம் வச்சு வளர்க்க முடியாதும்மா.. புரிஞ்சிக்க என் செல்லபிள்ளைல.. கோச்சிக்க கூடாது. அதுமில்லாம தெருநாய்லாம் வீட்ல வச்சு வளர்த்தா டிஸீஸ்லாம் வரும்டா கண்ணா’’ என்று கொஞ்சினார். 

இந்தா இதை சாப்டு என கையில் வைத்திருந்த இட்லியை பிட்டு ஊட்ட முயன்றார் அப்பா. யுவாஞ்சலி சாப்பிட மறுத்தாள். ‘’ப்ளீஸ்ப்பா மணி பாவம்ப்பா, அவனை நானே நல்லா ஷாம்பூ போட்டு குளிப்பாட்டிறேன். நாம டாக்டர்கிட்ட போய் ஊசிபோடுவோம் அவனுக்கு, நீ அவனுக்கு டாக் ஃபுட் வாங்கிட்டு வா.. அப்பா.. அதுக்கு யாருமே இல்லப்பா’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பா என்ன செய்வதென்று யோசித்தான். பேசாமல் அதட்டினால் என்னவென்று நினைத்தான். ஆனால் அவனுக்கு அதில் விருப்பமில்லை.

‘’ப்பா… ப்பா..’’ என்று அருகில் படுத்துக்கொண்டு அப்பாவை எழுப்பினாள். அப்பா காது கேட்காதது போல எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும். ‘’பாப்பா நீ ரொம்ப நல்ல பாப்பாவாச்சே ஏன் இன்னைக்கு இப்படி அடம்பிடிக்கறே’’ என்றார். ‘’மணி இல்லப்பா மணி அவன் ரொம்ப நல்லவன்ப்பா, அவன் கொஞ்சம் வளர்ந்தப்பறம் கூட வெளிய விட்ரலாம்ப்பா, இப்போ அவன் குட்டிபையனா இருக்கானா, அவனை யார்னா கடிச்சிட்டா, அவனுக்கு ரோட் க்ராஸ் பண்ணக்கூட தெரியாதுப்பா, நான்தான் அவனுக்கு அதுகூட சொல்லிக்குடுத்தேன்ப்பா, இரண்டு சைடும் பார்த்துட்டு க்ராஸ் பண்ணனும்னு ஆனா அவனுக்கு தெரிலப்பா.. அவனை நானே நல்லா பாத்துப்பேன்ப்பா அவனுக்கு எப்படி சாப்புடறது தூங்கறது ரோட் க்ராஸ்பண்றது சண்ட போடறதுனாலும் நானே சொல்லிக்குடுப்பேன்ப்பா ப்ளீஸ்ப்பா’’ அப்பாவின் மார்பில் சாய்ந்துகொண்டு கொஞ்சினாள். அப்பா தலைக்கு மேல் சுழலும் ஃபேனை பார்த்துக்கொண்டே யோசித்தார்.

‘’சரி ஒன்னு பண்ணுவோம் , நாளைக்கு சன்டேதான.. அதை கொண்டுபோய் ப்ளூக்ராஸ்ல விட்ருவோம்..’’ என்றான். ‘’ப்ளூ க்ராஸ்னா?’’ அப்பாவின் காதுகளை விரலால் தேய்த்துக்கொண்டே கேட்டாள். 

‘’ப்ளூ க்ராஸ்னா தெருவுல தனியா சுத்துற குட்டி நாய்களையெல்லாம் ஒன்னா சேர்த்து அதுக்கு நேரா நேரத்துக்கு சாப்பாடு போட்டு அன்பா பார்த்துக்கற இடம். அங்க இந்த குட்டிநாய் மாதிரி நூத்துக்கணக்குல இருக்கும். நாம எப்பயாச்சும் போய் பாக்கறதுனா பாத்துக்கலாம் , மனுஷங்களுக்கு அநாதை இல்லம் இருக்குல்ல அதுமாதிரி..’’ என்றார். யுவாஞ்சலி கொஞ்சநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு மீண்டும் அப்பாவின் மீது கால்களை போட்டுக்கொண்டு.

‘’ப்பா.. அநாதை இல்லம்னா என்னப்பா?’’ என்றாள். 

‘’அநாதை இல்லம்னா.. ம்ம்ம்ம்ம்… பாத்துக்க யாருமில்லாத அப்பா அம்மா இல்லாத குழந்தைங்க இருப்பாங்க இல்ல, அவங்கள பாத்துக்கற இடம்’’. யுவாஞ்சலி பதில் எதையும் பேசவில்லை. 

‘’நாம நாளைக்கு காலைல ப்ளூக்ராஸ் போறோம் நாய்குட்டிய விடறோம் சரியம்மா’’ என்று பாப்பாவின் தலையை வருடிக்கொண்டே அவளை தன் இடதுகையால் அணைத்துக்கொண்டே சொன்னார். ‘’ம்ம்’’ என்கிற அவளுடைய சன்னமான குரல் அவளுடைய அரைமனதுடனான சம்மதத்தை அறிவித்தது.

அன்றைக்கு ராத்திரி யுவாஞ்சலி மணியை ப்ளுக்ராஸில் விட்டபிறகு என்னாகும் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவனை ப்ளுக்ராஸில் விட்டாலும் வாரம் ஒருமுறையாவது அவனைப்போய் பார்த்து பிஸ்கட் வாங்கித்தரவேண்டும், தான் வளர்ந்ததும் தனி வீடு வாங்கி அதில் மணியை வளர்க்க வேண்டும், அவனுக்கு டாம்அன்ஜெர்ரியில் வருவதுபோல குட்டி நாய்வீடு கட்டித்தரவேண்டும். நாளைக்கு அவனை நன்றாக குளிப்பாட்டி, காய்கறி வாங்கும் கூடையில் டர்க்கிடவலில் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும். போவதற்கு முன்பு நிறைய பால் கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கிற பெரிய பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துவிடலாம். வாரம் ஒருமுறை அப்பாவை அழைத்துக்கொண்டு போய் அவனை பார்த்துவிட்டு வரவேண்டும். தொடர் நினைவுகளோடு தூங்கினாள். 

‘’சார் இதுல ஒரு கையெழுத்துப்போடுங்க… இதோ இங்கே’’ என்று ஒரு லெட்ஜர் புத்தகத்தை டேபிளில் வைத்து புரட்டிக் காட்டினார் அலுவலக பெண்மணி. ‘’எங்கே நாய்க்குட்டிய காட்டுங்க’’ என்றதும் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் காய்கறி கூடையில் வைத்திருந்த மணியை விரித்துக்காட்டினாள் யுவாஞ்சலி. மணி நிமிர்ந்து பார்த்து க்க்ரீங்க் என்றது. 

சுற்றிலும் நாய் வாசனை நிறைந்திருந்தது. எங்கும் நாய்களின் குரைப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. சிலர் பூனைக்குட்டிகளோடு வந்து காத்திருந்தனர். தூரத்தில் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. நாய்க்குட்டியை விட்டுப்பிரிய அவளுக்கு மனமே இல்லை. 

‘’அப்பா மணிய நாமளே வச்சிக்கலாம்ப்பா’’ கடைசியாக ஒருமுறை. அப்பா அவளை திரும்பிப்பார்த்துவிட்டு ‘’ஏங்க நாய்குட்டிய பத்திரமா பாத்துக்குவீங்கதானே’’ என்றார். 

‘’பாப்பா டோன்ட் வொர்ரி உன் குட்டிநாய் இங்கே ரொம்ப சேஃப்பா இருக்கும்.. நீ எப்ப வேணும்னாலும் வந்து பாத்துக்கலாம் ஓக்கேவா.. இங்கேதான் இதுக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ் இருப்பாங்க அதுக்கும் ஜாலியாருக்கும்’’ என்றாள் அலுவலக பெண்மணி. 

‘’ஆனா நான் இருக்கமாட்டேன்லே’’ என்ற முறைத்துக்கொண்டே கேட்டாள் யுவாஞ்சலி. 

யுவாஞ்சலியின் கேள்விக்கு அங்கிருந்த யாருக்கும் பதில்சொல்லத் தெரியவில்லை. பதில் சொல்ல முடியாத கேள்விகளை குழந்தைகள் கேட்கும் போது பேச்சை மாற்றுவதுதானே பெரியவர்கள் டெக்னிக். ‘’நீ எந்த ஸ்கூல் என்ன படிக்கற சமத்து பொண்ணா இருக்கீயே’’ என்றாள் அலுவலக பெண்மணி. யுவாஞ்சலி முகத்தை திருப்பிக்கொண்டாள். எதிரில் சுவற்றில் மணி ஜாடையில் ஒரு குட்டிநாயின் புகைப்படமிருந்தது. ச்சே அப்பாவோட மொபைல்ல மணியை போட்டோ கூட எடுக்கலையே.. என்று நினைத்துக்கொண்டாள். 

கடைசியா ஒருமுறை அப்பாவை நிமிர்ந்து பார்த்து ‘’ப்ளீஸ்ப்பா’’ என்றாள். அவர் கேட்காதது போலிருந்தார். ‘’அப்பா உன் மொபைல் குடேன்.. மணிய ஒரு போட்டோ எடுத்துக்குறேன்’’ என்றாள். அப்பா தன்னுடைய மொபைலை நீட்டினார். அவளே அதை திறந்து கேமராவை வெளியே எடுத்து கேமராவை ஆன் செய்துவிட்டு கூடையை கீழே வைத்து அதிலிருந்து மணியை இடுப்பை பிடித்து வெளியே தூக்கினாள். அதை அப்படியே கீழே வைத்துவிட்டு ‘’மணி இங்கப்பாரு’’ என்று சொல்லிக்கொண்டே கேமராவில் பார்க்க, கேமராவில் மணியை காணோம்… 

கீய் கீய் என கத்திக்கொண்டே துள்ளிகுதித்து அங்கிருந்து வேகமாக ஓடத்தொடங்கினான் மணி. நேராக ஓடி அலுவலகத்தை விட்டு வெளியே ஓடிவந்தான். மணி இவ்வளவு வேகமாக ஓடி பார்த்ததேயில்லை. நாலு கால் பாய்ச்சலில் அவன் வராண்டாவை கடந்துவிட்டான். 

பின்னாலேயே யுவாஞ்சலியும் அலுவலக ஆள் ஒருவரும் அப்பாவும் ஓடினர். ஒரு குட்டி எலியைப்போல கண்ணிமைக்கு நேரத்தில் மணி வாசலை தாண்டிவிட்டான் வெளியேறிவிட்டான் மணி. 

ப்ளூக்ராஸ் அலுவலகத்திற்கு வருகிற வழியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் ஒன்றின் அருகில் போய் நின்றவன் க்ய்யீக் க்ய்யீக் என குரைக்கத்தொடங்கினான். அந்த கூண்டுகளில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு வயதுடைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் போய் நின்றுகொண்டான். 

கூண்டுக்கு மறுபுறம் அலமேலு இருந்தாள். மணியை பார்த்ததும் அவளும் வ்வ்ராக்… வ்வ்ராக் என குரைத்து வாலை ஆட்டி அன்பை வெளிகாட்டினாள். கூண்டின் சந்துவழியாக நாக்கை நீட்டி தன்னுடைய குட்டியை நக்கிக்கொடுக்க அக்கூண்டின் சின்ன சந்துவழியே அலமேலுவின் இடுப்பில் பரவியிருந்த மார்புக்காம்புகளில் ஒன்றை கவ்வி பால்குடிக்கத்தொடங்கினான் மணி. 

நூறாண்டுகளாக பசியோடிருக்கிற ஒருவன் சாப்பிட ஆரம்பித்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு வேகத்தில் பாலை உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருந்ததான் மணி. மணியை விலக்க எத்தனித்த அலுவலக பணியாளை அப்பா தடுத்து நிறுத்தினார். அலமேலு தன் நாக்கை கூண்டுகளின் வழியே வெளியே நீட்டி மணியின் தலையை நக்க முற்பட்டது முடியவில்லை. இதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நின்றாள் யுவாஞ்சலி. ஜீவா மற்றும் ப்ளுக்ராஸ் அலுவலக பணியாள் என எல்லோரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

‘’இப்போ ஹேப்பியா.. உன்னோட நாய்க்குட்டிக்கு அதோட அம்மா கிடைச்சிட்டாங்க’’ முகத்தில் புன்னகையோடு சொன்னார் அப்பா. 

பைக்கை பொறுமையா ஓட்டிக்கொண்டு வந்தார் அப்பா. பின்னால் அவரை கட்டிக்கொண்டிருந்த யுவாஞ்சலி எதுவும் பதில் பேசாமல் வந்தாள். ப்ளுக்ராஸில் மணியை ஒப்படைத்துவிட்டு அலமேலுவையும் பார்த்துவிட்டு கிளம்பியதிலிருந்து அமைதியாகவே இருந்தாள். 

‘’டோன்ட் வொர்ரி பாப்பா இரண்டுநாள்ல மணியையும் அலமேலுவையும் நாமளே கூட்டிட்டு வந்துடலாம்.. அப்புறம் மறுபடியும் அதுங்க நம்ம தெருவுல சந்தோஷமா இருப்பாங்க.. ஏன் இன்னும் உம்முனே இருக்கே.. ச்சியர் அப்’’ என்று யுவாஞ்சலியை தேற்றமுனைந்தான். ஆனால் அவளுடைய மௌனம் கலையவேயில்லை. கண்ணிமைக்காமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு முடிக்கும்போதுதான் பேசினாள். 

‘’ப்ப்பா.’’

‘’என்னம்மா’’

‘’நம்ம அம்மா கூட இதே மாதிரி எங்கயாச்சும் இருப்பாங்களாப்பா.. நாம போய் தேடலாமாப்பா’’ என்றாள். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சாப்பாட்டை பிசைந்துகொண்டே அமர்ந்திருந்தார் அப்பா. ‘’ஹோம் ஒர்க்லாம் பண்ணிட்டியா பாப்பா’’ என்றார். 

யுவாஞ்சலி  பதில் பேசாமல் தட்டை எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்கு போய் அதை கழுவி வைத்துவிட்டு டிவியை போட்டு சோட்டோபீம் பார்க்கத்தொடங்கினாள். 

கனவுகளுடன்
ஜீவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக